சின்ன வயசுல ஒருமைப்பாட பத்தி ஒரு பாடு கிளாஸ் எடுப்பாங்க. அதோட உண்மையான அர்த்தம் தமிழ்நாட்டுல ரெண்டு இடத்துல மட்டும்தான் இருக்கு. ஒண்ணு சினிமா தியேட்டர்.. இன்னொண்ணு டாஸ்மாக். டாஸ்மாக் பத்தி எல்லாம் எழுதி தீர்த்துட்டதால, நம்ம சினிமா தியேட்டர் பத்தி பாப்போம். கழுதை கெட்டா குட்டிச் சுவரு.. நான் கெட்டா திருநெல்வேலிதான்.
தடுக்கி விழுந்தா தியேட்டர் அப்படிங்குறதுக்கு எங்க ஊர் ஒரு உதாரணமா சொல்லலாம். சில தியேட்டரெல்லாம் எங்கப்பா ஸ்கூல் படிக்கும் போதுல இருந்து இருக்கு. பசங்க எல்லாம் வெளில போனோம்னா, ஒண்ணு தின்னுட்டு வருவோம் இல்ல படம் பாத்துட்டு வருவோம்.
திருநெல்வேலி டவுண்ல பஸ் ஸ்டாப் பேரே ஒரு காலத்துல இப்படித்தான் இருந்தது. சிவசக்தி தியேட்டர் ஸ்டாப், செண்ட்ரல் தியேட்டர் ஸ்டாப், ரத்னா தியேட்டர் ஸ்டாப், ராயல் தியேட்டர் ஸ்டாப், அருணகிரி தியேட்டர் ஸ்டாப் கடைசில கணேஷ் தியேட்டர் ஸ்டாப். இப்படி ஸ்டாப்கு ஸ்டாப் தியேட்டர் தான். அதனால படம் பாக்குறதுக்கு மட்டும் குறையே கிடையாது. அதுலயும் லீவுக்கு சொந்தக்காரங்க எல்லாம் வந்துட்டாங்கன்னா அவ்வளவுதான், படத்துக்கு போறது ஒரு திருவிழா மாதிரி இருக்கும்.
சில படங்கள மறக்க முடியாது, அதே மாதிரி சில தியேட்டர்களை மறக்கவே முடியாது. முருகன்குறிச்சில செல்வம் தியேட்டர்னு ஒண்ணு இருந்தது. அங்க தான் நான் முதன் முதல்ல தனியா படம் பாக்க ஆரம்பிச்சேன். கார்த்திக் நடிச்ச பிஸ்தானு ஒரு படம். அதைதான் தனியா முதன் முதல்ல பாத்தேன். அதுக்கு முன்னாடி படத்துக்கு போகணும்னா அண்ணனுக்காகவோ இல்லை அப்பாவுக்காகவோ காத்திருக்கணும்.
முன்னெல்லாம் இண்டெர்வெல் அப்போ உள்ளயே முறுக்கு, கடலைமிட்டாய் எல்லாம் கொண்டு வந்து விப்பாங்க. இப்ப ஏன் அந்த விஷயமெல்லாம் இல்லைனு தெரியலை. ரத்னா தியேட்டர்லதான் எல்லா ரஜினி படமும் ரிலீஸ் ஆகும். மெஸ்ல வேலை பாக்கும்போது தமிழ் புத்தாண்டுக்கு காலைல டவுண் மார்க்கெட்டுல காய்கறி வாங்கிட்டு வந்துகிட்டிருந்தோம். காலைல மூணு மணி இருக்கும். ரத்னா தியேட்டர் வாசல்ல சரியான கூட்டம். நின்னு நின்னு களைப்பாகி எல்லாரும் அங்கேயே பேப்பர் துண்டு எல்லாம் விரிச்சு படுத்திருந்தாங்க. நாங்க சும்மா ஒரு நிமிஷம் வண்டிய நிப்பாட்ட, கூட வந்த பய சத்தமா “சூப்பர் ஸ்டார்”னு கத்திட்டான். தூங்கிட்டு இருந்தவங்க எல்லாம் சுச் போட்டா மாதிரி எந்திரிச்சு “வாழ்க! வாழ்க”னு கத்த ஆரம்பிச்சுட்டானுங்க. அதுல பாதி பேர் டிக்கட் குடுக்க ஆரம்பிச்சாச்சுனு கவுண்டருக்குத் தாவ அங்க ஒரே தள்ளு முள்ளு. நாங்க மாட்டிகிட கூடாதேனு அங்க இருந்து ஒரே ஓட்டம் எடுத்துட்டோம்.
இப்போ எப்படினு தெரியலை. 2004 ல பாம்பே தியேட்டர்ல 10 ரூவா டிக்கட் உண்டு. செவ்வாய்கிழமை மட்டும் மின்சார வாரியம் பாளையங்கோட்டைல மதியம் கரண்ட் கட் பண்ணிடுவாங்க. பாம்பே தியேட்டர் 10 ரூவா டிக்கட் கவுண்டர்ல போய் நிக்க, பயங்கர சைக்கிள் பந்தயமே நடக்கும். 10 ரூவா டிக்கட், ரெண்டு ரூவா சைக்கிள் பாஸ், 3 ரூவா சம்சா, சந்தோஷமா ஒரு மதியம் கழிஞ்சுடும். இப்படி சினிமா தியேட்டர் பத்தி பலப் பல நினைவுகள்.
முதல்ல எங்க ஊர்ல மூடின சினிமா தியேட்டர் செல்வம். சேது, பாரதி, எட்டுப்பட்டி ராசா எல்லாம் முதல் ரவுண்ட்ல நல்லாவே போகலை. செகண்ட் ரவுண்ட் செல்வம் தியேட்டர்ல எடுத்துதான் அந்தப் படம் எல்லாம் பயங்க ஹிட் ஆகி ஓடிச்சு. அங்க கார்த்திக் படம் எல்லாமே எடுப்பாங்க. உள்ளத்தை அள்ளித்தா, பிஸ்தா, கோகுலத்தில் சீதை எல்லாம் அங்கதான் பாத்தேன். மூடினப்போ ஒரு மாதிரி கஷ்டமா இருந்துச்சு. இப்போ ஊர்க்கு போகும்போது ராயல் டாக்கீஸ் மூடிட்டதா சொன்னாங்க. ராயல் டாக்கீஸ் மறக்க முடியாத ஒரு தியேட்டர்.
நாங்க பதினொண்ணாம் கிளாஸ் படிக்கும் போது பல கல்சுரல்ஸ் அப்படி இப்படினு கலந்துகிட்டு, பல ஸ்கூல் பசங்க கூட பழக்கமாச்சு. இப்ப மாதிரி அப்போ செல் போனெல்லாம் கிடையாதுல்ல. பஸ் ஸ்டாப்ல பாத்துகிட்டாதான் உண்டு. ஆனா அந்த குறிப்பிட்ட வருஷம் மட்டும், எந்த ஸ்கூல் பையன வேணும்னா ராயல் தியேட்டர்ல பாக்கலாம். அங்கத்தான் “துள்ளுவதோ இளமை” படம் ரிலீஸ் ஆச்சு. டைரக்டர், நடிகர் எல்லாம் யாருன்னே தெரியாது.. பாட்டெல்லாம் சரியான ஹிட். அதனால பசங்க முதல் நாளே படத்துக்கு போயாச்சு. போயிட்டு வந்தவங்க முகத்துல ஈயாடலை.. முக்கியமா அங்க காலைல ஷோவுக்கும் மதியம் ஷோவுக்கும், அந்தப் படத்துக்கு பொண்ணுங்களுக்கு டிக்கட் குடுக்க மாட்டாங்க. அதனால தியேட்டர் பூரா எங்க அராஜகம் தான். ஒரு காலத்துல ஹரிதாஸ் படம் 3 வருஷம் ஓடின தியேட்டர் அது. போஸ்டர் அடிச்சு ஓய்ஞ்சு போயி சிமெண்டுல செதுக்கியே வெச்சுட்டாங்க. இப்போ தியேட்டரே இல்லை.
இதையெல்லாம் மனசுல வெச்சு, ஒன்பது குழி சம்பத் படக்குழுவினர், திரையரங்க தினம்னு ஏப்ரல் 18அ கொண்டாடுறாங்க. நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம். உங்களுக்கும் திரையரங்கம் சம்பந்தமா எதுனா நினைவுகள் இருந்தா 16ம் தேதிக்குள்ள எழுதி இங்க பதிவு பண்ணுங்க. பரிசுகள் காத்திருக்கு.