கம்பராமாயணத்தை நம்ம படிக்க முடியாது. கம்பராமாயணம் பெரிய மனசு பண்ணா நம்ம கைக்கு அது வரும். எங்க அம்மா மேல எனக்கு அப்படி ஒரு பொறாமை இந்த விஷயத்துல உண்டு. எங்க ஊர்ல நெல்லைக் கண்ணன்னு ஒருத்தர் இருப்பார். இருக்கார். அவர் கம்பராமயணத்தைப் பத்திப் பேசினா கேட்டுட்டே இருக்கலாம். கம்பராமாயணம் அவர் சொல்லக் கேட்டா, அது மேல ஒரு பெரிய காதலே வந்திரும். எவ்வளவு அழகு. என்னைப் பொறுத்தவரைக்கும் எழுத்தாளனோ இல்லை கவிஞனோ இருந்தா, அவன் கம்பன் மாதிரியோ இல்லை பாரதி மாதிரியோ இருக்கணும். அவங்களைப் படிக்குற யாரும் அவங்களை வெளி மனுஷனாப் பாக்க மாட்டாங்க. ஒரு பெரிய கெத்து இருக்குற பிம்பம் எல்லாம் மனசுல வராது. நான் பெருசா கம்பனை படிச்சதில்லை. ஆனா அவனை படிச்சவங்க எல்லோரும், தன் நண்பனாவோ இல்லை, தானாவோ தான் நினைச்சுப்பாங்க.
எனக்கு பாரதி குடுத்த அதே உணர்வை ஒரு வேளை கம்பன் அவங்களுக்கு குடுத்திருக்கலாம். இல்லை அதுக்கு மேலயும் குடுத்திருக்கலாம். எவ்வளவு பாடல்கள். எவ்வளவு உவமைகள்.
எங்க வீடு ஒரு வித்தியாசமான வீடு. எங்கப்பா எப்பவுமே எங்களை வெளில நடக்குற கூட்டத்துக்கெல்லாம் போய் கேட்டு வரச் சொல்லுவார். நமக்கா அது பெரிய கொடுமை. என்னடா ரோட்ல நின்னு யார் பேசுறதையோ கேக்கணுமேனு இருக்கும். வீட்டுக்கு வந்தா மீட்டிங்ல என்ன பேசினாங்கனு வேற சொல்லணும். திராவிட கட்சிகள் மீட்டிங்னா கூட பரவாயில்லை யாரையாச்சும் திட்டுவாங்க. கம்யூனிஸ்ட் கட்சி மீட்டிங்கெல்லாம் போனா அவ்வளவு தான். அப்படி ஒரு வாட்டிக் கேட்டது தான் இந்த கம்பனோட வார்த்தைகள்.
அதாவது, தசரதன் ஒரு நாள் கண்ணாடி முன்னாடி நின்னு பாத்துகிட்டு இருக்கும் பொழுது அவர் காது பக்கத்துல ஒரு நரை முடி தெரிஞ்சதாம். அப்பதான் சரி நமக்கு வயசாயிடுச்சு, பையன்கிட்ட பொறுப்ப ஒப்படைக்க நேரம் வந்திடுச்சுனு அவருக்கு தோணிச்சாம். இதைக் கேட்டப்போ இருந்து எங்கப்பாக்கு நரை தெரியுதானு பாத்துட்டே இருப்பேன். அவருக்கு ஒரு வேளை நரைச்சுட்டா, அவரை உக்கார வெச்சுட்டு நம்ம வேலை எல்லாம் பாக்கணும்னு தோணிட்டே இருக்கும். நான் கொஞ்சம் மக்குங்குறது அப்பாக்குத் தெரியுமோ என்னவோ, லேட்டாதான் அவருக்கு நரைச்சது.
இன்னொரு விஷயத்தையும் நம்ம இங்க பாக்கணும். ஒரு புலவருக்கு ஒரு நரை முடி கூட இல்லைனு எல்லோரும் கேட்டப்போ, மனசுக்கு பிடிச்ச வேலை, அருமையான மனைவி மக்கள், நல்ல வேலையாட்கள், இதெல்லாம் இருக்கும் போது எனக்கென்ன கவலை. எப்படி நரைக்கும்னு அவர் கேட்டாப்புலயாம். அப்போ தசரதனும் ஆட்சி அதிகாரம் கசக்க ஆரம்பிச்சிருக்கும். பிடிக்காத வேலைய பண்ணறதை விட லைன்ல இருக்குற பயபுள்ளைக்கு குடுக்கலாம்னு தோணிருக்கும்னு அப்புறமா எனக்குப் பட்டுச்சு.
இவங்களை படிக்குறதுல என்ன பிரச்சினைனா, சம்பந்தப்பட்ட நேரத்துல அந்தப் பாட்டு மனசுல வந்துத் தொலைக்கும். அப்புறம் தமிழ் இனிக்க ஆரம்பிக்கும். பக்கத்துல சொல்லி ரசிக்க ஆள் இல்லைன்னா, தனியா சிரிக்க வேண்டி வரும். அப்புறம் ஊரே நம்மளப் பாத்து சிரிக்கும். இந்த தமிழ் புலவர்கள் பண்ற கூத்து கொஞ்சமா நஞ்சமா?
அதே போல, எங்களுக்கு ஊர்ல ஒரு நல்ல நட்பு வட்டம் உண்டு. இங்க இப்பத்தான் ஒரு வட்டம் அமையுது. ஒவ்வொரு தடவை வீட்டைக் காலி பண்ணும் போதும் எங்க அண்ணனுடைய நண்பர்கள் வருவாங்க. எங்களைக்கூட ஒரு வேலை செய்ய விடாம எல்லாத்தையும் அடுக்கி ஏத்தி இறக்கி எல்லா வேலையும் பண்ணுவாங்க. அப்போ அவங்களுக்கெல்லாம் ஒரு நன்றி சொல்லணும்னு கூட எனக்குத் தோணலை.அது என்னவோ அவங்க கடமை மாதிரி அவங்க பண்ணிட்டுப் போயிட்டாங்க. கம்பர் மொழில சொல்லணும்னா
”குகனோடும் ஐவர் ஆனோம் முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம்; எம் உழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்
புகல் அரும் கானம்தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை”.”
இதுல யாரு குகன், யாரு சுக்ரீவன்னு என்னால இப்போ சொல்ல முடியாது. என்னைப் பாத்து குரங்குனு சொன்னியா, அண்ணனைக் காட்டி குடுக்குறவன்னு சொன்னியான்னு சண்டைக்கு வந்துடுவாங்க.
பருவம் வந்த அனைவருக்கும் வருவது காதல். எனக்கும் வந்தது. பிறக்கும் போது எப்படி இறப்பு நிச்சயமாயிடுதோ அதே போல காதலிக்க ஆரம்பிக்கும் போதே பிரிவும் முடிவாயிடுது. சிலருக்கு உடலளவுல, சிலருக்கு மனசளவுல. முதல் வாட்டி அப்படி நடக்கும் போது எனக்கு நெஞ்சுல அப்படி ஒரு வலி. தாங்கவே முடியலை. ஒரு வேலையும் செய்யப் பிடிக்காது. கவுண்டமணி காமெடி பாத்தாக் கூட கடுப்பா இருக்கும். என்ன பண்ண ஏது பண்ணனு தெரியாம, கடுப்புல சுத்திட்டு இருப்பேன். எங்க அண்ணன் என்னை நல்லா புரிஞ்சுகிட்டு தொந்தரவே பண்ணலை. ஆனா 4 வருஷம் கழிச்சு இந்தப் பாட்டை என்கிட்ட சொன்னார் பாருங்க. இதை விட அந்த நிலைமைய யாரால சொல்ல முடியும்.
மத்துறு தயிர் என வந்து சென்று இடை
தத்துறும் உயிரோடு புலன்கள் தள்ளும்
பித்து நின் பிரிவில் பிறந்த வேதனை
எத்தனை உலா? அவை எண்ணும் ஈட்டவோ?
அதாவது, மத்தை வெச்சுத் தயிர் கடையரப்போ, தயிர் நுரைச்சு பாத்திரத்தோட ஒரு பக்க விளிம்புக்கு போயிடுமாம். உடனே மத்து இன்னொரு பக்கம் போய் அதை அப்படியே பாத்திரத்துக்குள்ள தள்ளிடுமாம். அதே மாதிரி உடலாகிய பாத்திரத்தை, நினைவுகளாகிய மத்து கடையுறப்போ, உயிர் போகவும் போகாம உள்ளையும் நிக்க முடியாம படுமே ஒரு கஷ்டம்! அப்பப்பா! காதலிச்சவனுக்கும் தயிருக்கும் மட்டுமே தெரிஞ்ச வலி அது.
சும்மாவா சொன்னாங்க, தமிழை ரசிக்க ஒரு ஆயுள் போதாது. இப்ப இருக்குற பசங்களுக்கு அவங்க பேர் தமிழ்ல எழுதத் தெரிஞ்சாலே பெரிய விஷயம். இந்த சிந்தனைகளையும், இந்த உவமைகளையும் அவங்க தெரிஞ்சுக்காமலே போற வாய்ப்பிருக்குனு நினைக்கும் போது மறுபடி மனசுல மத்து கடையுது.
Comments
@ un kadaisi vari: adhukku dhan unna madhiri palar blog ezhudharangale… adhellam padicha podhadhu… 🙂
Such a nice post… And only now i recognize that i have missed the opportunity which i had to read the book… the maturu poem is really so meaningful 🙂