அன்னை மெஸ் – பாகம் 8

முந்தைய பதிவுகள்

அடுத்த வாரம் மெஸ்ஸே ஒரே பரபரப்பா இருந்தது. எப்பவும் சட்டையே இல்லாம் உக்காந்திருக்குற எங்க வெட்டு மாஸ்டர், அன்னைக்கு எழுபதுகள்ல பரபரப்பா இருந்த கழுத காது காலர் வெச்ச சட்டை போட்டிருந்தார். நம்ம மணிய பத்தி கேக்கவே தேவை இல்லை. சும்மாவே ஆள் மினுமினுப்பா இருப்பாப்புல, அன்னைக்கு அரை இஞ்ச் பவுடர் ஜாஸ்தியா இருந்தது. ரெண்டு நாள் கடை பக்கம் போகாம சுத்திட்டு காலைல கடைக்குப் போன எனக்கு இன்ப அதிர்ச்சி.

என்னைக்குமில்லாம மணி எங்கிட்ட வந்து, “என்ன பிரசன்னா?? எப்புடி?”ன்னார்.

“என்ன எப்புடி?”

“ஓண்ணும் தெரியலையோ?”

“இல்லையே”

சட்டுனு சடை பைக்குள்ள இருந்து மூக்குப் பொடி டப்பா சைஸுக்கு ஒண்ணு எடுத்தார். கேட்டா ஜவ்வாதாமா. என்னயா நடக்குது இங்கனு நினைக்குறதுகுள்ள..

“சார்”னு ஒரு குரல்.

பாத்தா ஒரு 30, 35 வயசுல ஒரு அம்மா நின்னுகிட்டு இருந்தாங்க.

“என்னம்மா வேணும்”

“பெரியவர் வர சொல்லியிருந்தார்”

“என்ன விஷயமா?”

கேக்குறதுகுள்ள எங்க வெட்டு மாஸ்டரும் மணியும் ஓடி வந்துட்டாங்க.

“பிரசன்னா! பிரசன்னா! இவங்க தான் அவங்க”

“யாரு?”

”எனக்கு அஸிஸ்டெண்ட்” வெட்டு மாஸ்டர் சொல்லிட்டார்.

“இவாளுக்கே பதினோறு மணிக்கு மேல வேலை கிடையாதாம். இவருக்கு அஸிஸ்டெண்ட் கேக்குது.. எனக்கு கூட மாட ஒத்தாசையா இருக்க அப்பா வர சொல்லிருக்காருப்பா” மணி.

சரி வேலைய ஆரம்பிங்கனு சொல்லியாச்சு. அப்பா வந்ததும் கேட்டா, வந்த அம்மா பேரு சாந்தி. இதுக்கு முன்னாடி ரெண்டு மூணு கடைல வேலை பாத்திருக்காங்க. எல்லா வேலையும் செய்யுறாங்க. காய்கறி வெட்டுறது, சமையலுக்கு ஒத்தாசை, பார்சல் கட்டுறது, பாத்திரம் தேய்க்குறதுனு எல்லாம் தெரியுமாம்.

நல்லாத்தான் போய்க்கிட்டுருந்தது. அவங்களுக்கும் ஒரு பொண்ணு இருந்தது. அதுவும் கூட மாட எல்லாம் பண்ணுமாம். ஆனா எங்களுக்கு இப்பத்தைக்கு ஆள் தேவை இல்லைனு வர வேண்டாம்னு சொல்லிட்டோம். காலைல வந்திடுவாங்க. ஆனா எனக்கென்னவோ அவங்க கிட்ட ஒரு விதமான தயக்கம். பெருசா பேசிக்க மாட்டேன். அண்ணனும் அப்படித்தான்.

ஒரு நாள் காலைல எங்க அண்ணன் கடைல உக்காந்திருந்தார். எட்டரை மணி இருக்கும். ஒருத்தர் வந்து 3 செட் பூரி பார்சல் கேட்டார். உள்ள கேட்டா மணி பூரி இல்லைனு சொல்லிட்டார். எங்கப்பா பெரிய பெரிய கம்பெனில வேலை பாத்ததால இன்வேண்டரி எண்ட்ரி எல்லாம் பக்காவா இருக்கும். புக்கைப் பாத்தா ரெண்டு செட் பூரி தான் போயிருக்கு வெளில. மாஸ்டர்ட அர்ஜெண்டா பூரி போட சொல்லிட்டு வந்து அண்ணன் மணி கிட்ட கேட்டார்.

“என்னாச்சு போட்ட பூரி எல்லாம்?”

“என்னைக் கேட்டா?”

ராஜா தாத்தா கூட இல்லை பழி போட, சொல்லுங்க வேற எங்கையாவது பார்சல் போகுதா?”

“நீ வேறப்பா! மாஸ்டர் அளக்கத் தெரியாம மாவு போட்டிருப்பான்”

“கேட்டாச்சு! ஒரு கிலோ மைதா போட்டிருக்கு. 24 பூரியாவது வரணும். 4 பூரி போக 20 பூரி என்னாச்சு?”

“அப்புறம் பேசுவோம். இப்ப பார்சல் கட்ட வேலை இருக்கு” அண்ணனுக்கு மணி மேல இருந்த சந்தேகம் போகலை. நான் வந்ததும் என்கிட்ட சொன்னார். நான் கேக்குறேன்னு சொல்லிட்டு உள்ள மணிகிட்ட போனேன்.  உர்ருனு இருந்ததால பேசல. மாஸ்டர் கிட்ட போய் இப்ப எத்தனை கிலோ மாவு போட்டார்னு கேட்டேன். மறுபடி ஒரு கிலோ போட்டிருந்தார்.

வெளில வந்து பாத்தா 12 தான் இருக்கு. எனக்கே ஷாக். மணிகிட்ட கேட்டேன். டேப்ல பாட்ட சத்தமா வெச்சிட்டு எனக்கு மட்டும் கேக்குற மாதிரி “என் கிட்டயே இரு. எப்படி காணாம போகுதுனு காட்டுறேன். சுரேஷ் என்னை சந்தேகப்பட்டாம்பா”

நானும் உக்காந்துகிட்டே இருந்தேன். அந்தம்மா அடுக்களைக்குள்ள இருந்து வெட்டு மாஸ்டர் பக்கம் போச்சு. டேபிள் தாண்டி தான் போயாகணும். திரும்பி உள்ள போச்சு. மணி கூப்பிட்டான். இப்ப தட்டுல எட்டு பூரி தான் இருந்தது.

“இப்படித்தான் எல்லாம் போகுது. அண்ணனும் தம்பியும் என்னை சந்தேகப்பட்டியளேடே”

“நான் சந்தேகமே படலை மணி”

“நீ பாத்ததுலயே தெரிஞ்சிட்டு”

எங்கண்ணன் அந்தம்மாவ கூப்பிட்டு சொன்னாங்க. அம்மா, இந்த மாதிரி நம்ம ஒரு நாளைக்கு 3 கிலோ மாவு பூரி வித்தாலே பெரிய விஷயம். அதுல ஒரு கிலோ நீங்களே சாப்பிட்டா நல்லதில்லை. லைன் முடிஞ்சப்புறம் ஒரு பத்து மணிக்கா சாப்பிட்டுகிடுங்கனு சொல்லியாச்சு. அதுக்கு அந்தம்மா சொன்ன பதிலைத் தான் இப்ப வரைக்கும் என்னால மறக்க முடியலை.

“வயித்துக்கு தான தம்பி சாப்பிடுறேன். இதுல குத்தம் சொன்னா எப்படி?”

24 பூரி வயித்துக்கு சாப்பிட்டிருக்கு அந்தம்மா.. பாவம்.

அதுல இருந்து மணிகிட்ட பேசுறதில்ல அவங்க. போட்டுக் குடுத்துட்டார்ல. ஒரு நாள் அவசர வேலையா எங்க மாஸ்டர் அவர் வீட்டுக்கு போயிட்டார். மதியம் சாப்பாடு பண்ண ஆள் இல்லை. இந்தம்மாவே பண்ணிடுறேன்னு சொல்லிட்டாங்க. ஆனா துணைக்கு பொண்ணை கூப்பிட்டுக்கிறேன்னு சொன்னாங்க. ஒரு நாளைக்காக இன்னும் செலவு பண்ணனுமானு யோசிக்கும்போது அவங்களே

“காசெல்லாம் வேணாம் தம்பி! அவ சாப்பிட குடுத்தா போதும்”

ஏற்கனவே பட்டது போதும்னு நான் எங்கண்ணனுக்கு கண்ணை காமிச்சேன். அவங்களும் அதைப் பாத்துட்டாங்க. “சாம்பார்லாம் வேணாம் தம்பி! அவ வெறும் வத்தக்குழம்பு தான் திம்பா!”

அண்ணனும் சரினு வரச் சொல்லிட்டார். அம்மாவும் பொண்ணும் சும்மா பம்பரமாத் தான் சுத்தினாங்க. நினைச்சதை விட சீக்கிரமாவே ரெடியாயிடுச்சு. அசைவ ஹோட்டல்ல வேலை பாத்ததாலயோ என்னமோ சாம்பார் கொஞ்சம் பரவாயில்லை ரகம் தான். ஆனா ரசமும் வத்தகுழம்பும் சூப்பர். அவங்க பொண்ணு பரிமாறெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு, நாங்களே பரிமாறி காசெல்லாம் வாங்கிப் போட்டுகிட்டிருந்தோம். மணி அவசர அவசரமா என்கிட்ட வந்தாப்புல,

“அந்தப் பிள்ளை சாப்பிடுது”

“காலைலயே அண்ணன்கிட்ட சொல்லியாச்சு. சாப்பிடட்டும்”

“எனக்கொண்ணுமில்லை, ரெண்டு மணிக்கு அண்ணனும் தம்பியும் வந்து கிலோக்கு இத்தனை சாப்பாடு இருக்கணும், பாக்கி எங்கனு எங்கிட்ட கேக்காதீங்க”

“என்னயா சொல்ற?”

“அடுக்களைக்கு நீயே போய்ப் பாரு.”

அங்க போய் பாத்தா, அந்தப் பொண்ணு மூணு பேர் சாப்பாட்ட இலைல போட்டு வத்தக்குழம்பு மட்டும் ஊத்தி தின்னுகிட்டு இருக்கு. அவங்கம்மா பரவசமா பாத்துகிட்டு இருந்தாங்க. ஒண்ணும் சொல்லலை. எங்கண்ணன்கிட்ட மட்டும் சொன்னேன். அந்தம்மா ஒரு கல்யாணத்துக்கே சமைச்சா கூட அந்தப் பொண்ணுக்கு முழு சாப்பாடு போடுறேன்னு வாக்கு குடுக்காதீங்க. முடியாது.

அவங்க பொண்ணு ஒரு நாலு மணிக்கா கிளம்பிட்டு.

“சைவம் அவ்வளவா திங்க மாட்டா” ஓஹோ!!

“இதுக்கு முன்னாடி எங்கம்மா வேலைப் பாத்தீங்க?”

“நாங்க் ரெண்டு பேருமே பிரியாணி கடை பாய் கடைல தான்”

“இப்ப எங்க அவரு?”

“அவரு கடைய மூடிட்டு வேலூருக்கே போயிட்டார்”

மணி அப்புறமா எங்ககிட்ட வந்து சொன்னார் “ஒரு வேளை அவனும் ஒரு வேளை சோறுக்கு ஓகே சொல்லிருப்பான் போல”

அது மட்டுமில்லாம, ஏகப்பட்ட பொய். பாத்திரம் கழுவ ஒரு வண்டி பாத்திரம் போச்சுன்னா வரும்போது பாதி தான் வரும். சுவருக்கு அந்தப் பக்கம் பாத்திரத்த எல்லாம் தூக்கிப் போட்டு அப்புறமா ஓடிப் போய் எடுத்துட்டு வீட்டுக்கு போயிடும். ஒரு வாட்டி கண்டு பிடிச்சுட்டோம். நாங்க குரல உசத்துறதுக்கு முன்னாடி எங்க வெட்டு மாஸ்டர் அவ கைய பிடிச்சி இழுத்துட்டார்னு கூச்சல் போட்டு ஓடிருச்சு. எதுத்தாப்புல இருக்குற ஹோட்டல் காரர் எங்கப்பாட்ட அப்புறமா சொன்னார்

“மூதி தொலையுதுனு விட்ருங்க. இல்லை நீங்க கைய பிடிச்சி இழுத்தீங்கனு ஊர் பூரா சொல்லி வைக்கும்”

அடுத்த நாள் எங்க வெட்டு மாஸ்டர் சட்டையில்லாம வந்து நின்னார். மணி பார்சல் கட்டி குடுத்து அவர்கிட்ட போய்

“என்னவே கழுதைக் காதென்னாச்சு?”

“பேசாம போயிரு, இல்லை அப்பிருவேன்”

நான் “என்ன மாஸ்டர், என்ன விஷயம்”

“போன மூதி போகச்சுல என் கத்தியும் வெச்சு வெட்டுற பலகையையும் தூக்கிட்டு போயிட்டா பிரசன்னா! புதுசா ஒண்ணு வாங்கித் தாயேன்”

பேசிட்டே இருக்கும் போது அப்பா வந்தார்.

“ஆமா பிரசன்னா! ரெண்டு சேத்து வாங்கணும். பொருட்காட்சி வருது! கடை போட முடியுமானு பாக்கணும்”

சும்மாத்தான் சொல்றாருன்னு நினைச்சேன். அடுத்த மாசம் நாங்க பட்ட பாடு இருக்கே!!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.