அன்னை மெஸ் – பாகம் 7

முந்தைய பதிவுகள்.

ஒரு வழியா இந்த ராஜா தாத்தா தொல்லை முடிஞ்சது. அதனால அப்பாவ அப்பப்ப மாத்தி விடுற வேலைகளை நானும் எங்க அண்ணனும் பண்ணிகிட்டு இருந்தோம். இது மணிக்கு கொஞ்சம் சாதகமா போயிருச்சு. எப்ப பாரு ஒரே ஜாலி தான் மனுஷன். பாட்டு பாடுறதென்ன, ஆடிகிட்டே பார்சல் கட்டுறதென்ன?. அப்பல்லாம் எப் எம் கிடையாது. நாங்க மெஸ்க்கு தனியா ஒரு வீடு, தங்க தனியா ஒரு வீடு எடுத்துட்டோம். அதனால, மெஸ்ல டீவி எல்லாம் கிடையாது. நாங்க வெச்சிருந்த டேப் மட்டும் தான் ஒரு பொழுதுபோக்கு அம்சம்.

ஆனா எங்களுக்கு அப்படி இல்லை. இருக்கவே இருக்கார் மணி. அவருக்கும் வெட்டு மாஸ்டருக்கும் அவ்வளவு பொருத்தம். சான்ஸ் கிடைச்சிருந்தா மணியோட விரல், நாக்கு எல்லாம் எங்க வெட்டு மாஸ்டர் கிட்ட வந்திருக்கும். ஆச்சு நாப்பது வயசுக்கு மேல. கல்யாணம் எதுவும் பண்ணிக்கிடலை. எப்ப பாரு கைல ஒரு பீடி. ஒரு அம்பது ரூவா குடுத்தா கூட பீடி தான் வாங்குவாரே தவிர்த்து சிகரெட் பக்கம் கூட போக மாட்டார்.

“உடம்புக்கு கெடுதி டே”

“பீடி குடிச்சா மட்டும் தங்க பஸ்பம் சாப்டா மாதிரியா?”

எங்க கடைல ரொம்ப நாள் வேலை பாத்தது, சொல்லப்போனா கடைசி வரைக்கும் வேலை பாத்தது மணி தான். எங்கப்பா, அண்ணன், என்னை எல்லாம் சமாளிக்குற ஆள். வெளில போடுற கடைக்கு துணைக்கு மணினா நான் கவலையே படாம போயிடுவேன். எப்படியும் நைட் செந்தில்வேல் தியேட்டர்ல எதுனா படம் பாத்திருப்பார்.

“சொக்கத்தங்கம் பாத்தேன் பிரசன்னா, என்னா படம்கே”

“எனக்கு பிடிக்கல மணி”

“உனக்கெப்படி பிடிக்கும்? தங்கச்சியா, அக்காவா?”

“உங்களுக்கு?”

“எனக்கும் யாரும் இல்லை, ஆனா எங்க காம்பவுண்டுல இருக்குறதெல்லாம் எனக்கு அக்கா தங்கை மாதிரி தாண்டே”

கல்யாணம் தான் ஆகலையே தவிர சாருக்கு கமலுக்கப்புறம் பொண்ணுங்களுக்கு அவருதான்னு ஒரு நினைப்பு. ஒரு பஸ், ஆட்டோ, வேன் விடமாட்டார். கரெக்டா டயம் பாத்து, சீப்பு, பவுடர், குங்குமம்னு ரெடி ஆகிடுவார். எப்படியெல்லாம் லுக் விடணும்னு அவர்கிட்டதான் நான் கத்துகிட்டேன் பாத்திகிடுங்க.

“என்ன மணி, ஹோட்டல் காரன் பொண்ணு போகுது போல”

“நான் அதெல்லாம் பாக்க மாட்டேன் பா”

“ஏன்?”

“அதான், நீ பாக்கெல்லா”

“என்  கிரகம்யா உம்ம கூடல்லாம் போட்டி போட வேண்டியிருக்கு. இதுல விட்டு வேற குடுக்காரு. கொடுமை. என்னத்த சொல்ல?”

மணிகிட்ட அப்புறம் ரொம்ப பிடிச்ச விஷயம், அவரோட சைக்கிள். பெரிய கேரியர் வெச்சிருப்பார். கடைல போயிட்டு ஒரு மாசத்துக்கு தேவையான காய்கறி, பலசரக்கு எல்லாம் கேரியலயே வாங்கி வெச்சிட்டு வந்திரலாம். மணிய கோவப்படுத்த எங்களுக்கு இருக்குற ஒரே ஆயுதம். மதியம் சாப்பாடு முடிஞ்ச பிறகு அதோட கேரியர்ல ஏறி உக்காந்துகிடுவேன். எங்க அலர்ட் வெச்சிருந்தாரோ என்னவோ, எங்க இருந்தாலும் ஓடி வந்து என்னைப் பத்தி விடப் பாப்பார்.

“என்ன வேணா பேசுடே, சைக்கிள்ல விளையாடாத”

“அப்படி என்ன சைக்கிள் மேல அவ்வளவு பாசம்”

“எங்கம்மாக்கு பொறவு எங்கூட ரொம்ப நாள் இருக்குதுடே இது”

சொன்னா மாதிரி அம்மாவ பாத்துகுற மாதிரி தான் பாத்துக்குவார். ஒரு பக்கத்துல இருந்தும் சத்தம் வந்ததே கிடையாது. ரொம்ப தூரம் போய் எதுனா வாங்கிட்டு வரணும்னா, அவர் கிட்ட தான் கெஞ்சிக் கூத்தாடி சைக்கிள் வாங்கிட்டு போவேன். அழுத்துறதும் தெரியாது, போயிட்டு வாரதும் தெரியாது. கொண்டு வந்து நிறுத்திட்டு அவர்கிட்ட இதை சொன்னா, பெருமையா மீசை மேல கை வைச்சுட்டு ஒரு புன்னகை பூப்பார் பாருங்க. பேட் மொபைல் பண்ண, லுசியஸ் பாக்ஸ் எல்லாம் பிச்சை வாங்கணும்.

அவர் சொந்த வாழ்க்கைய பத்தியெல்லாம் ரொம்ப பேசிக்க மாட்டோம். கல்யாணம் பண்ணிக்கலையே தவிர ஊர்ல ஒரு பொண்ணு கூட தொடுப்பு இருக்குனு பேசிக்கிடுவாங்க. எங்களுக்கு அது தேவையில்லாத விஷயம். அதனால நாங்க அத ஒண்ணும் கேட்டுக்கலை. எப்பவாச்சும் கல்யாணத்த பத்தி கேட்டா மையமா சிரிச்சு மழுப்பிடுவார். சரி, பேசப் பிடிக்கல போலனு நாங்களும் விட்ருவோம். கல்யாணத்த பத்தி தான் பேச மாட்டாப்புல, பொண்ணுங்கள பத்தி பேச ஆரம்பிச்சா போதும் சரிக்கு சரியா வந்து நின்னுக்குவார்.

நமக்கு வாய்த்த நண்பர்கள் மிகவும் அருமையானவர்கள். அவர்களுக்கு வாழ்க்கையில முக்கியமான விஷயம் நாலு. பொண்ணுங்க, லட்கியாங், கேர்ள்ஸ், பிகர்ஸ். இதைத் தாண்டி நாங்க புரட்சிகரமா பேசினதெல்லாம் கிடையாது. நண்பர்கள் கடைக்கு வந்து புதுசா எந்தப் பொண்ண பத்தி பேசினாலும் மணிக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும். பசங்க டென்ஷன் ஆகிடுவாங்க. எனக்கா குஷியாயிடும், இந்தாளு நமக்கு மட்டும் போட்டியில்ல, ஊர்ல ஒரு பொண்ணைக் கூட விடலைன்னு.

“பிரஸ், நம்ம ஜாவர் சார் டியூஷனுக்கு புதுசா ஒரு பொண்ணு பச்சை ஸ்கூட்டில வருதுல” பாலா சொல்லுவான்.

“அது புது பிள்ளை எல்லாம் இல்லை, ரெண்டு வருஷம் அவங்க தாத்தா வீட்ல தங்கி படிச்சுச்சு. நம்ம சிவன் கோயில் தெரு தான்” பார்சல் கட்டிகிட்டே போற போக்குல மணி போடுற பொக்ரான் இது.

”எல இந்தாள் சரியில்லை, எந்தப் பிள்ளையப் பத்தி பேசினாலும் சரியா சொல்லிப்புடுதாரு” நம்மவர்கள் அப்பப்போ சொல்லுவாங்க. ஒரு நாள் நல்ல மூட்ல இருக்கும் போது நானே கேட்டேன்.

“மணி, சொல்லுதேன்னு கோவிச்சுக்காதீங்க. எல்லாம் நல்ல படியா நடந்திருந்தா, உங்களுக்கு அந்த வயசுல பிள்ளைகள் இருக்கும். அதுகள பத்தி விவரம் கேட்டு வைக்குறதெல்லாம் நல்லாவா இருக்கு?”

“அந்தப் பொடிசுகளை பத்தி எனக்கெதுக்கு?”

“பின்ன எல்லாம் எப்படித் தெரியும்”

“அவங்க அம்மா, சித்தியெல்லாம் நான் சைட் அடிச்சிருக்கேம்டே. அதான் ஒரு பாசத்துல தகவல் கேக்குறது”

அவரை கடைசி வரைக்கும் திருத்தவே முடியாதுன்னு விட்டுட்டோம். அப்போ தான் எங்கப்பா, புதுசா ஒரு அம்மாவை வேலைக்கு சேக்குறதா சொன்னார். அவங்களே காய்கறி வெட்டி, சமையலுக்கு உதவியும் பண்ணி, பாத்திரமும் தேய்க்குற மாதிரி. அப்ப ஆரம்பிச்சது எங்க வெட்டு மாஸ்ட்டருக்கும், மணிக்கும் வாய்க்கால் வரப்பு தகராறு. மணியோட எண்ணெய், சீப்பு செலவு எல்லாம் ரெண்டு மடங்காச்சு. எங்களுக்கு புது தலைவலியும் வந்தது.

அடுத்த பதிவில் தொடரும்…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.